Tuesday, July 14, 2009

பெருந்தலைவர் காமராஜ்

நாட்டின் உய‌ர்ந்த தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்;குடும்ப நலனை விட மக்கள் நலனை பெரிதாக நினைத்தவர்; ஏழைகளுக்காகவே, அவர்களது நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்; நாட்டின் விடுதலைக்காக சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்; சுமார் 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து,தமிழகத்தை பல வகையிலும் முன்னேற்றியவர்; இலஞ்சம் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது ஆட்சி செய்தவர்; தனக்கென்றோ தனது குடும்பத்திற்கென்றோ ஒரு பைசா கூட சொத்து சேர்க்காதவர்; திருமணமே செய்து கொள்ளாமல், தனது வாழ்க்கையை நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தியாகம் செய்தவர்; பிர‌த‌ம‌ர் ப‌த‌வியே த‌ன்னை நாடி வந்த‌ போதும் கூட பதவியை நாடாது மக்கள் சேவையை நாடியவர்;இவர் போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனி தோன்ற மாட்டாரா என்று மக்கள் இன்றும் ஏங்குமளவுக்கு பெருமை கொண்டவர்; மாபெரும் தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்; சரித்திரம் காணாத, இனியும் காண முடியாத அப்பழுக்கற்ற தலைவர்; அவர் பிறந்த தமிழ் நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை; ஒரு நல்ல தலைவர்; திறமை வாய்ந்த தலைவர்; பெருமை மிக்க தலைவர்; சிறப்பு வாய்ந்த தலைவர்; உண்மையான தலைவர்; எளிமையான தலைவர் என்ற அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவம் காமராஜ். காமராஜர் ஒரு சரித்திரம்; ஒரு தியாக வரலாறு; பாரதத்தின் உண்மையான ரத்னா. ஜூலை 15. அவ‌ர‌து பிற‌ந்த‌ தின‌ம்; அவ‌ரை நாம் என்றும் ம‌ற‌வாதிருப்ப‌தே நாம் நாட்டுக்கு செய்யும் மிக‌ப் பெரும் தொண்டு.

Thursday, July 2, 2009

ஐ.மு.கூ. அரசு மக்களுக்கு தந்த பரிசு

ஐ.மு.கூ. அரசு தனக்கு பெருவாரியாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு, 50 நாட்களுக்குள் பெட்ரோலியப் பொருள்களின் அபரிமிதமான விலை உயர்வு என்ற பரிசை வழங்கி திக்குமுக்காட வைத்திருக்கிறது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ 4 ம் , டீசலுக்கு லிட்டருக்கு ரூ 2 ம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அத்யாவசியப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வால் பெரும் அவதிப்பட்டு வரும் மக்கள் தலையில் இதன் மூலம் மேலும் விலைவாசி உயர்வு என்ற சுமை ஏறப்போகிறது. உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை ஏறியிருப்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என அரசு கூறுகிறது. உலக மார்க்கெட்டில் இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால், உலகில் கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எந்த அளவு இருந்ததோ அந்த அளவுக்கு அதிக பட்சமாக விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிந்திருக்கிறது அரசு. 2008 டிசம்பர் முதல் 2009 ஜனவர் வரை அதாவது கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 49.66. டில்லியில் ரூ 45.62, கொல்கத்தாவில் ரூ 47.16 மும்பையில் ரூ 49.08 ஆக இருந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 34.95, டில்லியில் ரூ 32.06, கொல்கத்தாவில் ரூ 33.92 மும்பையில் ரூ 36.39.ஆக இருந்தது. பிறகு கச்சா எண்ணெய் விலை உலக மர்க்கெட்டில் வெகுவாக சரிந்து பேரலுக்கு 45 டாலர் என்ற் அளவை எட்டியபோது அரசு 2009 ஜனவர் 29 ல், பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. அப்போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 44.24. டில்லியில் ரூ 40.62, கொல்கத்தாவில் ரூ 44.05 மும்பையில் ரூ 44.55 ஆக குறைந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 32.82, டில்லியில் ரூ 30.86, கொல்கத்தாவில் ரூ 33.21 மும்பையில் ரூ 34.45.ஆக குறைந்தது. இப்போதைய விலை ; பெட்ரோல் விலை சென்னையில் ரூ 48.58. டில்லியில் ரூ 44.63, கொல்கத்தாவில் ரூ 48.25 ; மும்பையில் ரூ 48.76ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . டீசல் விலை சென்னையில் ரூ 34.98, டில்லியில் ரூ 32.87, கொல்கத்தாவில் ரூ 35.03 ; மும்பையில் ரூ 36.07 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . விலை ஓரளவே அதிகரித்திருக்கும்போது அரசு மிகவும் அதிகபட்சமாக விலையை உயர்த்தியிருக்கிறது என்பது நிதர்சணமான உண்மை. பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிற வரிகளை குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும். தேர்தல் காலமென்றால் ஆட்சி போய்விடும் என்ற அச்சத்தால் அரசு விலையை உயர்த்த தயங்கும்; ஆனால் இது தேர்தல் காலமல்ல; எனவே சகட்டு மேனிக்கு விலையை உயர்த்தியிருக்கிறது.