Thursday, July 2, 2009

ஐ.மு.கூ. அரசு மக்களுக்கு தந்த பரிசு

ஐ.மு.கூ. அரசு தனக்கு பெருவாரியாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு, 50 நாட்களுக்குள் பெட்ரோலியப் பொருள்களின் அபரிமிதமான விலை உயர்வு என்ற பரிசை வழங்கி திக்குமுக்காட வைத்திருக்கிறது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ 4 ம் , டீசலுக்கு லிட்டருக்கு ரூ 2 ம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அத்யாவசியப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வால் பெரும் அவதிப்பட்டு வரும் மக்கள் தலையில் இதன் மூலம் மேலும் விலைவாசி உயர்வு என்ற சுமை ஏறப்போகிறது. உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை ஏறியிருப்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என அரசு கூறுகிறது. உலக மார்க்கெட்டில் இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால், உலகில் கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எந்த அளவு இருந்ததோ அந்த அளவுக்கு அதிக பட்சமாக விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிந்திருக்கிறது அரசு. 2008 டிசம்பர் முதல் 2009 ஜனவர் வரை அதாவது கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 49.66. டில்லியில் ரூ 45.62, கொல்கத்தாவில் ரூ 47.16 மும்பையில் ரூ 49.08 ஆக இருந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 34.95, டில்லியில் ரூ 32.06, கொல்கத்தாவில் ரூ 33.92 மும்பையில் ரூ 36.39.ஆக இருந்தது. பிறகு கச்சா எண்ணெய் விலை உலக மர்க்கெட்டில் வெகுவாக சரிந்து பேரலுக்கு 45 டாலர் என்ற் அளவை எட்டியபோது அரசு 2009 ஜனவர் 29 ல், பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. அப்போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 44.24. டில்லியில் ரூ 40.62, கொல்கத்தாவில் ரூ 44.05 மும்பையில் ரூ 44.55 ஆக குறைந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 32.82, டில்லியில் ரூ 30.86, கொல்கத்தாவில் ரூ 33.21 மும்பையில் ரூ 34.45.ஆக குறைந்தது. இப்போதைய விலை ; பெட்ரோல் விலை சென்னையில் ரூ 48.58. டில்லியில் ரூ 44.63, கொல்கத்தாவில் ரூ 48.25 ; மும்பையில் ரூ 48.76ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . டீசல் விலை சென்னையில் ரூ 34.98, டில்லியில் ரூ 32.87, கொல்கத்தாவில் ரூ 35.03 ; மும்பையில் ரூ 36.07 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . விலை ஓரளவே அதிகரித்திருக்கும்போது அரசு மிகவும் அதிகபட்சமாக விலையை உயர்த்தியிருக்கிறது என்பது நிதர்சணமான உண்மை. பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிற வரிகளை குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும். தேர்தல் காலமென்றால் ஆட்சி போய்விடும் என்ற அச்சத்தால் அரசு விலையை உயர்த்த தயங்கும்; ஆனால் இது தேர்தல் காலமல்ல; எனவே சகட்டு மேனிக்கு விலையை உயர்த்தியிருக்கிறது.

Sunday, June 21, 2009

ஆழ்துளைக் கிணறுகள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயதுச் சிறுமி அஞ்சனா மீட்புப் படையினரால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறாள்; அவளது பெற்றோர் கடவுளுக்கும், மீட்புப் படையினருக்கும் தங்கள் நன்றியை தெரிவிக்கட்டும்; நாமும் அந்தச் சிறுமி உயிரோடு மீட்கப்பட்டதற்காக நிம்மதி கொள்வோம். இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் அடிக்கடி நிகழ்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன். சிலவற்றில் கிணற்றில் விழுந்த குழந்தைகள் உயீரோடு மீட்கப்பட்டிருக்கின்றனர்; சிலவற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஆக்ராவில் சோனா என்ற 2 வயதுச் சிறுமி இதே போல் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பிணமாக மீட்கப்பட்டாள். சென்னையில் கூட இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தோண்டிய ஆழ்துளைக் கிணற்றை உறுதியான மரப்பலகைகள் , இரும்புத்தகடுகள் போன்றவற்றால் மூடி வைத்தால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாது; கிணற்றை சுற்றி தற்காலிக பாதுகாப்பு வேலி கூட அமைக்கலாம். ஆனால் இந்த சிறு காரியத்தை கூட கிணற்றின் உரிமையாளர்கள் மேற்கொள்வதில்லை; அலட்சிய மனப்பான்மையே இதற்கு காரணம். இதுபோன்ற சம்பவங்களுக்கு கிணற்றின் உரிமையாளர்கள் கொலைக் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டாலே இனி இதுபோல் நிகழாமல் பாதுகாக்கலாம்.

Monday, May 18, 2009

நன்றிக்கடன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.மகத்தான வெற்று பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பெருவெற்றிக்கு காங்கிரஸ் தகுதியானதுதானா..? கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் சாதித்தது என்ன..? கடுமையான விலைவாசி உயர்வு; தொழிற்சாலைகள் மூடல்; இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழப்பு; வறுமையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை; கோடி கோடியாய் ஊழல்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் சுமார் 1 இலட்சம் கோடியளவுக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது; போபர்ஸ் ஊழலில் சோனியாவுக்கு நெருங்கியவரான குவத்ரோச்சியை கைதாகி விடாமல் பாதுகாக்கவும், அவர் ஊழலில் பெற்ற் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் தொகையை பத்திரமாக எடுத்துச் செல்லவும் உதவியது; மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை சுயமாக செயல்பட விடாமல் செய்து, அதை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்சி போல் மாற்றியது; நாடு முழுக்க பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; மத்திய அரசு பயங்கரவாதத்திற்கெதிராக மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடித்தது; பயங்கரவாதத்தால், ஆயிரக்கண்க்கில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு, முகமது அப்சல், அக்மல் கசாப் போன்ற தேச விரோத பயங்கரவாதிகளின் உயிர்களை பாதுகாப்பதில் மட்டும் மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது; பங்களதேஷிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவிய கோடிக்கணக்கானவர்களின் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது காங்கிரஸ் அரசு; நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இப்படி சட்டவிரோதமக குடியேறியவர்களின் கை இருப்பது புலனாய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தனது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்த பெருமை காங்கிரஸ் அரசுக்குரியது; இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த தவறான அணுகுமுறையின் விளைவாக ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மத்திய காங்கிரஸ் அரசு சோனிய குடும்ப அரசாக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி உட்பட பல்வேறு உதவிகளை புரிந்ததன் விளைவாக இலங்கை அரசு தமிழினப் படுகொலயையே நிறைவேற்றி முடித்திருக்கிறது; இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக 75 இலட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டு பதுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் பல நாடுகள் இப்படி தங்கள் நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட கருப்பு பண்த்தை மீட்க பெருமுயற்சி எடுத்து வருகின்ற வேளையில் காங்கிரஸ் அரசு அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததோடு அது சாத்தியமற்றது என்று கூறி பெரும் கருப்புப் பண முதலைகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. இப்படி பலவற்றை வரிசையாக கூறிக் கொண்டே தொடரலாம். இவைகள் இந்த அளவு பெரு வெற்றிக்கு ஐ.மு.கூ சிறிதும் தகுதியற்றது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், மக்கள் தீர்ப்பு அது தவறாயிருந்தாலும் கூட மதிக்கப்பட வேண்டியது அவசியம்; எனவே இனிவரும் காலங்களிலாவது தேச நலன் மக்கள் நலன் என்பதை மட்டும் அடிப்படையாய் கொண்டு செயல்பட்டு இந்தியாவை உலக அரங்கில் முதலிடத்திற்கு கொண்டு செல்வதை இலக்காக கொண்டு பணியாற்றுவதே வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் நன்றிக்கடனாயிருக்கும்

Sunday, May 10, 2009

அச்சம் தரும் நினைவுகள்

இந்தியப் பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் என்பவனுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு கடந்த 5 வருடங்களாக தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல், அவனை பாதுகாத்து வருகிறது. சிறுபான்மையினர்களின் ஓட்டுக்காக அப்சலை தூக்கிலிடாமல் காலம் தள்ளி வருகிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதிகளை கூட தண்டிக்க ம்றுக்கும், அதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றாமலிருக்கிற காங்கிரஸ் அரசின் இது போன்ற செயல்பாடுகள்தான் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க முக்கிய காரணமாயிருக்கின்றது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் வரிசைப்படி பார்த்தால் அப்சல் 22 வது இடத்தில் இருக்கிறான். அப்சலுக்கு முன் இருக்கிற 21 பேரும் தூக்கிலிடப்பட்ட பின் அப்சல் தூக்கிலிடப்படுவான் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், உணர்ச்சி வசப்பட்டும் கொலை போன்ற காரியங்களில் ஈடுபட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களை அப்சலோடு ஒப்பிடுகிறார் ராகுல். இது ஒரு பொறுப்பற்ற பேச்சு மட்டுமல்லாது நியாயமற்றதும் கூட. நமது நாட்டை சீர்குலைக்க திட்டமிட்டு, பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தவன் அப்சல்; நமது பாதுகாப்பு படை வீரர்கள் மட்டும் தங்கள் இன்னுயிரை ஈந்து அந்த தாக்குதலை முறியடித்திருக்காவிட்டால் நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் உட்பட பலர் உயிரிழந்திருப்பதோடு நாடே பயங்கரவாதிகளின் கைகளில் பணயக் கைதியாக மாற நேர்ந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கொடூர பயங்கரவாதியை சாதாரண கொலைக்குற்றவாளியோடு ஒப்பிடுகிறார் ராகுல் என்றால் இது எத்தகைய மடத்தனமானது..? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நமது நாட்டுக்கு கிடைத்த சாபம். இப்படிப்பட்டவர்களால்தான் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து அப்பாவிகள் ஆயிரமாயிரமாய் தங்கள் இன்னுயிர்களை இழக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களை மக்கள் ஒட்டுமொத்தமாய் நிராகரிக்க வேண்டும். சமீபத்தில் மும்பை மீது தாக்குதல் தொடுத்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிரோடு பிடிபட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறான். அவனுக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பது உறுதி. ராகுல் கூற்றுப்படி பார்த்தால் தூக்கு தண்டனை குற்றவாளிகள் பட்டியலில் கசாப் 23 வது இடத்திலிருப்பார்; எனவே கசாப்புக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என்பதுதானே ராகுல் தரும் செய்தி. எனவே ஒன்று மட்டும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால், எந்த பயங்கரவாதிக்கும் அவன் முஸ்லிமாக இருந்து விட்டால் தண்டனை கிடையாது என்பது உறுதியாகி விட்டது.இன்னொன்றும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தால், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகர்க்கவே செய்யும்; காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஆயிரமாயிரமாய் மக்கள் பயங்கரவாதத்திற்கு தங்கள் இன்னுயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதிகளால் ஆயிரமாயிரமாய் மக்கள் கொல்ல‌ப்ப‌ட‌லாம்; ஆனால் ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாதி த‌ண்டிக்க‌ப்ப‌ட்டுவிடக் கூடாது என்ப‌துதான் காங்கிர‌சின் கொள்கை . ராகுலின் பேச்சு இதைத்தான் எடுத்துக்காட்டுகிற‌து. அர‌சிய‌லில் இப்போதுதான் காலெடுத்து வைத்திருக்கின்ற் நில‌யில், ராகுலின் எண்ணங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதை பார்க்கும்போது இவரெல்லாம் பிரதமராகி விட்டால், நாடு என்ன ஆகும்..? மக்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள்..? நினைத்துப்பார்க்கவே அச்சமாயிருக்கிறது.

Sunday, April 26, 2009

இந்தியா அடிமைகளின் தேசமல்ல

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா தேர்தல் கூட்டத்தில் பேசும் போது, எனது தம்பி ராகுல் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். சோனியா காந்தி பேசும்போது, ராகுல் இப்போது பிரதமராக மாட்டார்; வருங்காலத்தில் பிரதமராவார் என்று கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தியோ எனக்கு இன்னும் போதுமான அனுபவம் கிடைக்கவில்லை; எனவே இப்போது பிரதமராக மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இந்தக் குடும்பம் ஏதோ மன்னர் குடும்பம் போலவும் இந்தியா ஏதோ அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான நாடு என்பது போலவும் இவர்களது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. இவர்களது இத்தகைய ஆணவப் பேச்சுக்களுக்கும், ஆணவ மனப்பான்மைக்கும் இந்தியர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் இந்தக் குடும்பத்திற்கு காலம் காலமாக கொத்தடிமைகளாக இருந்து கொண்டிருப்பாதால்தான் இவர்களிடமிருந்து இத்தகைய பேச்சுக்கள் வெளிப்படுகின்றன. ஆனால் ஒரு விஷயம் தெளிவானது; காங்கிரஸ்காரர்கள்தான் சோனியா குடும்பத்தின் கொத்தடிமைகளே தவிர மக்கள் அல்ல; இந்தியா மிகப்பெரும் தேசம்; ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நாட்டை ஆளும் தகுதியுண்டு. 2001 ல் காங்கிரசிலிருந்த முதுகெலும்புள்ள ஆண்மகனான நரசிம்மராவ் பிரதமராயிருந்தபோதே இந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு மக்கள் முடிவு கட்டிவிட்டார்கள். சுயமரியாதை அற்ற, தன்மானமிழந்த சில காங்கிரஸ்காரர்கள் இன்னும் இந்தக் குடும்பத்தின் கொத்தடிமைகளாகவே இருந்து கொண்டிருப்பதால், சோனிய குடும்பத்தினர் நாட்டின் பிரதமர் பதவி தங்கள் குடும்பச் சொத்து என்று கனவெல்லாம் கண்டு கொண்டிருக்கக் கூடாது. அது என்றுமே கனவாகத்தான் இருக்கும்.

Sunday, April 12, 2009

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர்

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார். இந்தியாவின் மாபெரும் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ டாக்ட‌ர் அம்பேத்க‌ர் அவ‌ர்க‌ளின் பிற‌ந்த‌ நாளில் அவ‌ரை பெருமையுட‌ன் நினைவுகூர்வோம்.

Tuesday, April 7, 2009

ஏப்ரல் 14. தமிழ்ப் புத்தாண்டு தினம்

இலங்கை இராணுவத்தின் குண்டுவீச்சில் சிக்கி இலங்கைத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான அப்பாவித் த‌மிழர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகிறது.அவர்கள் தங்கள் சொந்த வீடு நிலங்களை துறந்து, காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவ‌தோடு,பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காப்பாற்றவும், அவர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய இந்திய அரசு தனது கடமையிலிருந்து தவறியிருப்பதோடு, இலங்கை அரசுக்கு மறைமுக உதவிகளையும் செய்து வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில், சகோதர இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவை தெரிவிக்க உறுதி கொள்வோம்..